தமிழகம்

சம்பள பட்டுவாடா அதிகாரி மீது மாநகர போக்குவரத்து கழக ஊழியர் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: பிடித்தம் செய்த தொகையை எல்ஐசி-க்கு செலுத்தவில்லை என சம்பள பட்டுவாடா அதிகாரி மீது மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாநகர் பணிமனையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் கே.துளசிதாஸ் என்பவர் சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 6 மாத காலத்தில் என்னுடைய சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரத்தை எல்ஐசி-க்கு காப்பீட்டு தொகையாக மாநகர போக்குவரத்துக் கழகம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால்,அந்தத் தொகையை தன்னுடைய பயன்பாட்டுக்காக சம்பள பட்டுவாடா அதிகாரி பயன்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எல்ஐசியில் இருந்து நோட்டீஸ் வந்த நிலையில்,யாருக்கோ மாதாமாதம் பணம் அனுப்புவதாக மனைவி சந்தேகிக்கிறார். இதனால் குடும்பத்தில்அமைதி இழந்து அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதேபோல் 15 ஆயிரம் தொழிலாளர்களின் பணம் ரூ.200 கோடி கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை. எனவே,அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கும் தொழிலாளர்க ளுக்கும் சொந்தமான பணத்தை மீட்டு எல்ஐசி-க்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் கையாடல் செய்யப்பட்டது உறுதியானால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

          
SCROLL FOR NEXT