தொடர் மழையால் கடமலைக்குண்டு அருகே மூல வைகையில் ஏற்பட்டுள்ள நீர் வரத்து. 
தமிழகம்

தொடர் மழையால் 2 மாதத்துக்கு பிறகு மூல வைகையில் நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

செய்திப்பிரிவு

கண்டமனூர்: வறண்டிருந்த மூல வைகையில் 2 மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி உள்ளாட்சிகளின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட் டுள்ளது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளி மலை, அரசரடி, இந்திரா நகர், புலிகாட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் மூல வைகையாக உருவெடுக்கிறது. இந்த நீர் அம்மச்சியாபுரம் எனும் இடத்தில் முல்லை பெரியாற்றுடன் இணைந்து வைகை அணைக்குச் செல்கிறது. கடந்த 2 மாதIங்களாக போதிய அளவு மழையில்லாததால் மூல வைகை வறண்டு கிடந்தது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த லேசான மழையால், மூல வைகையின் முகத்துவாரத்தில் மட்டும் நீரோட்டம் இருந்தது. இந்நிலையில் சில நாட்களாக வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகையின் வழிநெடுகிலும் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சின்னச் சுருளி அருவியில் நீர் கொட்டி வருகிறது. மூல வைகை வறண்டு இருந்ததால் வருச நாடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

தற்போது நீரோட்டம் உள்ளதால் உறை கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், மூல வைகையே இப்பகுதி குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும் வழிவகை செய்து வருகிறது. சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போதைய நீரோட்டத்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

SCROLL FOR NEXT