தமிழகம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை மணலி புது நகர் எழில் நகரை சேர்ந்த மகேஷ் (33), மின் சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5-ம் தேதி பிற்பகல் 3.10 மணி அளவில் தனதுநண்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்தில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரைமீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மாலை 4.15 மணியளவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்தனர்.

இதையடுத்து, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், 2 சிறுநீரகம், இதய வால்வு, தோல், 2 கண்கள் என மொத்தம் 7 உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 5 நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளில் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

விபத்தில் இதயம் மற்றும்நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT