மதுரை: ஒருவரின் கல்வி சான்றிதழ் மீதுவேறு நபர் உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல்நோக்கு மருத்துவ படிப்பு பயின்ற நிலையில், என்னை கட்டாயப் பணி ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து, எனது அசல் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் பல்நோக்கு மருத்துவ படிப்பை 2024 பிப்ரவரியில் நிறைவுசெய்துள்ளார். முதுநிலை மருத்துவபடிப்பு முடிந்த பிறகு 2 ஆண்டு அரசுமருத்துவமனையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்த காலம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட் டுள்ளது.
மனுதாரர் கரோனா காலத்தில்பணியாற்றியுள்ளார். அப்பணிக் காலத்தை கட்டாய ஒப்பந்த பணிக்காலமாக கருதி, சான்றிதழ்களை வழங்குமாறு கோருகிறார். ஏற்கெனவே இதுபோன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில்சேவைசாரா படிப்பு முடித்தவர்களும் கரோனா காலத்தில் உயிரைப்பணயம் வைத்து பணியாற்றிஉள்ளனர். எனவே, அந்தப் பணிக்காலத்தை கட்டாய பணி ஒப்பந்த காலமாக கருத வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மனுதாரரின் கரோனாபணிக்காலத்தை ஒப்பந்த பணிக்காலமாக கருத்தில் கொள்ளலாம். ஒருவரின் கல்விச் சான்றிதழின் மீது யாரும் உரிமை கோர முடியாது.கல்விச் சான்றிதழ்கள் சந்தை விற்பனைப் பொருட்கள் அல்ல.
எனவே மனுதாரரின் கல்விச் சான்றிதழை 4 வாரத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி முதல்வர் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.