புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகளில் சென்றோரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 480 படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் திங்கள்கிழமை சென்றனர்.
இதில் 3 படகுகளில் சென்ற மீனவர்கள், புதுக்கோட்டை யில் இருந்து சுமார் 17 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் திங்கள்கிழமை இரவு மீன்பிடிக்க முயன்றபோது அவ்வழியாக சென்ற இலங்கை கடற்படையினர், புதுக்கோட்டை மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதுகுறித்து 3 படகுகளில் தப்பி கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது: கடலில் மீன்பிடிக்க ஆயத்தமானபோது அவ்வழியாகச் சென்ற இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் எங்களின் விசைப் படகுகளின் மீது மோதி சேதப்படுத்தினர்.
அதோடு, கற்களை வீசியதில் எங்கள் படகுகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் நாங்கள் பதறியடித்துக்கொண்டு கரை திரும்பி விட்டோம் என்றனர்.