தமிழகம்

தாய்லாந்தின் காஞ்சனபுரியில் நிறுவப்பட்டுள்ள நடுகல்: தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் உலகப் போரின் போது ரயில் பாதை கட்டுமானப்பணியில் இறந்த தமிழர்களின் நினைவை போற்றும் வகையில், தாய்லாந்தின் காஞ்சனபுரியில் நடுகல் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கடந்த ஏப். 11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நடுகல் நிறுவும் விழாவில்பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, நடுகல்நிறுவும் விழாவில் தமிழக அமைச்சர் மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்ட சமூக வலை தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

‘‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படைவாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா. நீத்தாரை நடுகல் வைத்துநினைவேந்துவது தமிழரான நமதுமரபு. இரண்டாம் உலகப்போரின் போது சயாம் - பர்மா ரயில்பாதை கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட் டில் நடைபெற்றுள்ளது.

தமிழக அரசின் சார்பில் இதற்கென ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான். அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழக அரசின் இந்த நடுகல் முயற்சி.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

SCROLL FOR NEXT