சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இரு கட்சியினரும் உதகை நகரில் உள்ள காஃபி ஹவுஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக செல்ல திரண்டிருந்தனர். அப்போது பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அதிமுகவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை என்றுகூறி போலீஸாரின் தடுப்பை மீறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்தையும் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜகவினரும், அதிமுகவினரும் டிபிஓ சந்திப்பில் மீண்டும் கூடினர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தடியடி நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினரும், பாஜகவினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதகை மத்திய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் உட்பட அதிமுகவின் 20 முக்கிய நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழும், பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மீது 2 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் கோரி கப்பச்சி வினோத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.