சென்னை: மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜராக உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம்சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர்மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத் துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதித்த நிலையில், அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.