ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால், குளம், குட்டைகள் வறண்டுகாணப்படுகின்றன. இதனால், வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், உணவு, குடிநீர்தேடி கிராமங்களுக்குள் நுழைந்து,வேளாண் நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் கிராமத்தில் நேற்று காலை நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில், வீட்டிலிருந்துவெளியே வந்த, அதே பகுதியை சேர்ந்த காளம்மா (70) என்ற மூதாட்டியை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில் நெய்தாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன் திரண்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறும்போது, “வனப் பகுதியை விட்டு யானைகள் வெளியேறாமல் இருக்க, அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்” என்றனர்.