திருப்பூர்: வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸா ருக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது.
மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமை வகித்து பேசியதாவது: வாக்களிக்க வரும் பொது மக்களிடம் போலீஸார் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், சின்னங்கள் உள்ளிட்டவை இருக்கக்கூடாது. 200 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர, வேறு யாருக்கும் முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க அனுமதிக்க கூடாது.
வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வருகிறவர்கள் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இதனை போலீஸார் கண்காணிக்க வேண்டும். போலீஸாரும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே அலைபேசி பயன்படுத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்கள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாநகரில் 1500 போலீஸாரும், மாவட்டத்தில் 2800 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் துணை ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணியில் கூடுதலாக ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.