பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 
தமிழகம்

“திராவிட மாடலை யாரும் கிண்டல் செய்யக் கூடாது” - கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பொள்ளாச்சியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.

விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வதுதான் திராவிட மாடல். ஆகவே, யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.

இலவச மின்சாரம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது? விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே, எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT