ராமநாதபுரத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டர். 
தமிழகம்

ராமநாதபுரத்தில் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பாஜக மாநிலத்தலைவர், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் வந்திருந்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். இதற்காக அவர்தேனியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்துக்கு பிற்பகல் 1.20 மணிக்கு வந்தார்.

பின்னர், அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அரண்மனைக்கு காரில் சென்றார். இந்நிலையில், அவர் வந்த ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் தேர்தல் பறக்கும் படைக் குழுவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பணமோ அல்லது பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT