தமிழகம்

கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ம் தேதி தொடக்கம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி சின்னமுட்டம் தொடங்கி திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்யும் காலமான ஏப்ரல், மே மாதத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம்குறைந்து விடும்.

இதைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிமுதல் ஜூன் 16-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் வரும்15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தைதங்குதளமாகக் கொண்டு 340-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவைக்கப்படும். அதேநேரத்தில், மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்.

எனினும், வள்ளம், கட்டுமரம், ஃபைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர். மீன்பிடித் தடைகாலமான இரு மாதமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.இதனால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT