அரூர்: தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி நேற்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கிராமம் கிராமமாக திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். போதக்காடு கிராமத்தின் வழியாக சென்றபோது அங்கு பெண் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணி மற்றும் தக்காளி செடியில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சவுமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண் தொழிலாளர்களுடன் இணைந்து சிறிது நேரம் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெற்றிப் பெற்றால் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.