தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் சென்னை வருகை

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். அரசு வாகனங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 16-ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ராமேசுவரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 2 படகுகளையும் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 21 மீனவர்களையும் கைது செய்தனர். 2 படகுகள், மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட 21 மீனவர்களும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளிடம் அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு 19 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், விசைப்படகு ஓட்டுநர்கள் 2 பேருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களையும் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 19 மீனவர்களும் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்ற தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள், அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT