கோப்புப்படம் 
தமிழகம்

முதியோர், மாற்றுத் திறனாளிகள் 4,500 பேர் தபால் வாக்கு செலுத்தும் பணி சென்னையில் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 4,538 பேர்தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வாக்குப்பதிவு மையத்துக்கு நேரடியாக சென்று வாக்களிப்பதில் சிரமம் உள்ளது. அவர்களில் விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தி.நகரில் அதிகபட்சம்: இதையடுத்து, விருப்பமுள்ள வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குச்சீட்டு கோரிய படிவம்-12டி பெறப்பட்டு, வாக்காளர்களின் பாகம் எண், வரிசை எண் ஆகியன சரிபார்த்து தபால் வாக்குச் சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட 4,175 பேர், 363 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 4,538 பேர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். அதிகபட்சமாக தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் 560 பேரும், அண்ணாநகர் தொகுதியில் 536 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

அந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுனை வழங்கி, வாக்குப்பதிவு செய்யும் முறை மற்றும் அதை உரிய உறையிடுதல் குறித்து தெளிவாக எடுத்துக் கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய உறை, உறுதிமொழி படிவம் அடங்கிய உறையை பெற்றுவர 67 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர், மேற்கூறிய வாக்காளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று வாக்குப்பதிவு நடத்தி, ஏப்.13-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உறையிட்ட வாக்குச் சீட்டை ஒப்படைக்க உள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT