தமிழகம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, தமிழகத்தில் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான். அந்த அடிப்படையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் அமீர்.

முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT