போடி: தேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனு ராதா போடியில் பிரச்சாரம் செய்தார்.
தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 24-ம் தேதி மாவட்ட எல்லையில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார். கடந்த 27-ம் தேதி மனுத் தாக்கல் செய்த பின்பு உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பல தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தேனி தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். போடி அருகே மறவபட்டி, திம்மி நாயக்கன் பட்டி, பொட்டிப்புரம், எரணம்பட்டி தேவாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்று தனது கணவருக்காக வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இத்தொகுதி மக்கள் காட்டும் அன்பு குறித்து எனது கணவர் அடிக்கடி கூறுவார். இத்தொகுதிக்கு சமுதாயக் கூடம், கோயில் வளர்ச்சிக்கான பணிகள் போன்றவற்றைச் செய்துள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பின்பு இங்கு வந்தபோதும் ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து மக்கள் பாராட்டி வருகின்றனர். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.