சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் அரசுபோக்குவரத்துக் கழக பேருந்துகளால் ஏற்பட்ட விபத்தில் 1,397 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளால் கடந்த 2022-ம்ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் 2023-ம்ஆண்டு நவ.30-ம் தேதி வரை ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தோரின் விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க மாநகர போக்குவரத்து பொதுச்செயலாளர் கே.அன்பழகன் கேட்டிருந்தார்.
இதில் சேலம், மதுரை கோட்டங்களைத் தவிர்த்து இதர கோட்டங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மேற்குறிப்பிட்ட காலத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 117 பேர், கோவை -245, திருநெல்வேலி- 185, விரைவு போக்குவரத்துக் கழகம் - 101, கும்பகோணம் - 398, விழுப்புரம்- 351 பேர் என மொத்தம் 1,397 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக கே.அன்பழகன் கூறியதாவது: விபத்துக்கான காரணம் குறித்துஆராய்வதில்லை. குறிப்பாக சம்பவ இடத்துக்கு வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர்கள் வருவதில்லை. 2 நாட்கள் கழித்து பேருந்துகளை சோதனைக்கு அனுப்புகின்றனர். அதற்கு முன் பேருந்தை சரிசெய்து ஓட்டுநர் மீது தவறு இருப்பதை போல காண்பிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க எதிரில் வருவோர் தவறு செய்தாலும் பேருந்துமீதே பழி சுமத்தப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாகபணிக்கு இடையில் விபத்து பிரிவுஅலுவலர்கள் விபத்து ஏற்படாதவாறு பேருந்துகளை இயக்க அறிவுறுத்துகின்றனர்.
இங்கு மெட்ரோ ரயில் பணிகளால் குறுகிய சாலைகள், தலைக்கவச விழிப்புணர்வு போன்றவற்றால் விபத்துகள் குறைந்துள்ளன. இதேபோல் மற்ற இடங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.