பூந்தமல்லி: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.4.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழ்மணம்பேட்டையை அடுத்த சிவலிங்கபுரம் பகுதியில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், வாகனத்தில் அண்ணாகுமார் என்பவர், உரிய ஆவணங்களின்றி ரூ.3.75 லட்சம் பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதே போல், பூந்தமல்லி அருகே உள்ள கோளப்பன்சேரி சோதனை சாவடி பகுதியில் நேற்றுஅதிகாலை தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், அவ்வழியே வாகனத்தில் வந்த சதீஷ், உரிய ஆவணங்களின்றி ரூ.90 ஆயிரத்து 200 பணத்தை எடுத்து சென்றுகொண்டிருந்தது தெரிய வந்தது. அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.