பத்திரக்கோட்டையில் உள்ள தனது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய பாமக வேட்பாளர் தங்கர்பச்சான். 
தமிழகம்

தனது மாந்தோப்பில் கிராமத்தினருடன் ஒன்று கூடி தங்கர் பச்சான் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கடலூர்: தேசிய ஜனநாயக கூட்டணியின், கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான்.

இவர், தன் சொந்த கிராமமான பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக் கோட்டையில் உள்ள தனது மாந்தோப்பில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். இதில் கிராம முக்கிய பிரமுகர்கள், பாமக மற்றும் பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடையே பேசிய தங்கர் பச்சான், “இந்தத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கும்பல் கும்பலாக கூடிப் பேசாமல், தனித்தனியாகச் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் நாம் ஈடுபட வேண்டும்.

எதிரணியினராக இருந்தாலும் என்னிடம்அடையாளம் காட்டுங்கள். அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பாமகவுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன்.

சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வது மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது. என்றும் அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கை களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால், அது பல லட்சம் வாக்குகளாக மாறும்.நம்மை எதிர்த்து யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்வோம்” என்றார்.

இந்த பிரச்சார கூட்டத்தில், பத்திரக் கோட்டை ஊர் பிரமுகர்களான காசி ராஜன், வேல் முருகன், செல்வம், ஐயப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பாமகவின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT