சென்னை: பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டின் போயம்-3 இயந்திரத்தின் ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பூமிக்கு மீண்டும் திருப்பி கொண்டுவரப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இது கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களை வழங்கி வருகிறது.
இதுதவிர எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்பு, ராக்கெட்டின் 4-ம் நிலையான பிஎஸ்4 (போயம்-3) இயந்திரமானது 350 கி.மீட்டருக்கு கீழே கொண்டு வரப்பட்டது. அதிலுள்ள ஆய்வுக் கருவிகள் மூலம் பல்வேறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. மொத்தம் 96 நாட்களில் சுமார் 2 ஆயிரம் முறை அந்த இயந்திரம் புவி தாழ்வட்டப் பாதையில் வலம் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டது. போயம்-3 மூலம் கிடைக்க பெற்ற தரவுகள் எதிர்கால திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்நிலையில் போயம்-3 ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் 2.04 மணிக்கு அதன் நிலை இறக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழ வைக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.