மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை நாளை பகல் 12 மணிக்குள் காலி செய்யுமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (பிப்.2) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின்கிழக்கு கோபுரம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கடைகளில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.
கிழக்கு கோபுரம் பகுதியில்தான் கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் 'பத்துக்குப் பத்து' என்ற அளவில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கோயில் பாதுகாப்பு கருதி இக்கடைகளை அகற்ற வேண்டும் என பல அமைப்புகள் ஏற்கெனவே வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் புகார்களும் கொடுத்தன. இருப்பினும் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக கடைகளை அகற்ற முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து நடந்தது. இதனையடுத்து, 115 கடைகளுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், கடைகளைக் உடனே காலி செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடைகளைக் காலி செய்வதற்கு தடை கோரி மீனாட்சி அம்மன் கோயில் வியாபாரிகள் சங்கத்தினர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதி பாரதிதாசன், "கோயில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய 115 கடைகளும் நாளை பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும். காலி செய்த பொருட்களை கோயில் நிர்வாகம் சொல்லும் இடத்தில் வைக்கலாம். பின்னர் அவற்றை அங்கிருந்து 3 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டார்.
மனுவின் விவரம்:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற கிளையில் தக்கல் செய்த மனுவில், "எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ விற்பனை செய்கிறோம். கடைகளுக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். எங்களிடம் கூடுதல் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு வசதி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு நேரத்தில் கோயில் முழுவதும் தலா ஒரு வாட்ச்மேன், எலெக்ட்ரீசன் பணியில் உள்ளனர்.
பிப். 2-ம் தேதி இரவு 10.20 மணிக்கு 72-வது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சம்பலானது. வியாபாரிகள் விரைந்து செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. மின் கசிவு தான் விபத்துக்கு காரணம். விபத்து நடைபெற்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. அப்போது எலக்ட்ரீசன் பணியில் இல்லை. அவர் பணியில் இருந்திருந்தால் தீ விபத்தை தடுத்திருக்கலாம்.
கோயில் நிர்வாகத்தின் தவறுதான் தீ விபத்துக்கு காரணம். இதனால் கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிபல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதை சமாளிப்பதற்காக கோயிலிலுள்ள கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனால் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்தும், கோயில் கடைகளை காலி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.