சென்னை: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டு மார்ச் மாதம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட விவரம்: கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் 18-ம்தேதி வரையிலான கால கட்டத்தை ஒப்பிடும்போது, நடப்பாண்டு, 16.81 சதவீதம் முன்பதிவு அதிகரித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டில் மொத்தம் 2.38 லட்சம் பேர் மொத்த மாக முன்பதிவு செய்து அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இறுதி நேர நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் அனைவரும் முன்பதிவு செய்து பயணிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயலி வாயிலாக முன்பதிவு: வசதிக்கேற்ப இருக்கைகளை தேர்வு செய்ய http://tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘முன்பதிவு இணையதளம் மற்றும் செயலியை மேம்படுத்துவதால் இணையவழியில் இருக்கைகள் முன்பதிவும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வதன் மூலம் பேருந்துகளின் தேவையை துல்லியமாக அறிந்து இயக்க முடிகிறது’ என தெரிவித்துள்ளார்.