புதுடெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
இதற்கு முன், நேற்று வெளியிடப்பட்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பேர் இடம்பெற்றிருந்தனர். அதன் விவரம்: தென்சென்னை - தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - நரசிம்மன், நீலகிரி (தனி) - எல்.முருகன், கோவை - அண்ணாமலை, நெல்லை - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி-பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - ஏ.சி.சண்முகம், பெரம்பலூர்-பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், தாமரை சின்னத்தில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 16 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான பங்கீடு நேற்றுடன் முடிந்தது. பாமகவுக்கு 10 தொகுதிகள், தமாகா 3, அமமுக 2 மற்றும் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் மற்றும் ஓபிஎஸ் அணி ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளவங்கோடு தொகுதிக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.