தமிழகம்

ஆய்வின்போது ரசாயனம் வெடித்து சிதறி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு @ கொளத்தூர்

செய்திப்பிரிவு

சென்னை: படிப்புக்காக ஆராய்ச்சி செய்தபோது ரசாயனம் வெடித்துச் சிதறி 12-ம்வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொளத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை கொளத்தூர் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் மேற்கு மாம்பலத்தில் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆதித்ய பிரணவ் (17). முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்ததால், திராவகம், ரசாயனம் வைத்து அவ்வப்போது ஆராய்ச்சி மேற்கொள்வாராம்.

கண்டுபிடிப்பு ஆர்வம்: ஆராய்ச்சி மூலம் புதுமையாக எதையாவது கண்டறிய வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் இந்தமாணவன் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மாணவன் ஆதித்ய பிரணவ்வீட்டில் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டாராம். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயனம் மற்றும் பேட்டரி வெடித்துச் சிதறி உள்ளது. இதில், வீட்டின் மேற்கூரைமற்றும் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இந்த விபத்தால் சுமார் 500 மீட்டர் சுற்றளவுள்ள வீடுகளும் குலுங்கி லேசான சேதம் அடைந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் சம்பவ இடம் விரைந்து மாணவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிஉள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் அங்கிருந்தவெடி சிதறல்களை சேகரித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT