கோப்புப்படம் 
தமிழகம்

வெயில் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்புகள்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வெயில் அதிகரித்து வருவதால் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், வெப்பத்தின் எதிர் விளைவுகளை கையாளுவதற்கான விரிவானசெயல் திட்டத்தை மாவட்டம்தோறும் வகுக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு - சர்க்கரைகரைசல் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும்.

பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோயுள்ளவர்களுக்கு உப்பு - சர்க்கரை நீர்கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவும் என்பதால், அதைக் கட்டாயம் இருப்பு வைக்க வேண்டும்.

அதேபோல், பருவகால பழங்கள்,காய்கறிகள், நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளுமாறும், வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்த வேண்டும். காலணி அணிதல், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவசர உதவிக்கும், ஆலோசனைக் கும் 104 என்ற சுகாதார உதவி மையத்தை அழைக்கலாம் என்ற பிரசுரங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT