தமிழகம்

சென்னையில் 4 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 4 காவல் நிலையங்கள் உலகத் தரத்தில் இருப்பதாக ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதேசமயம் காவல் நிலையங்களை உலகத் தரத்தில் தரம் உயர்ந்தும் பணியும் மற்றொருபுறம் நடைபெறுகிறது. அதன்படி, புகார் அளிக்க வரும் மனுதாரர்களை இன்முகத்தோடு வரவேற்றல்,காவல்நிலைய கட்டுமான அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுதல், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிதல் உள்ளிட்டபல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் காவல்நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தென் சென்னைக்கு உட்பட்ட அடையாறு காவல் மாவட்டத்தில் கிண்டி, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி ஆகிய 4 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.

காவல் நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தரச்சான்றிதழ் பெற வழிவகை செய்த கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் சென்னை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் ஆகியோரை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

SCROLL FOR NEXT