ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 484 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரேல் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற ராமேசுவரம் மீனவர்கள், நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்ததாகக் கூறி ஆரோக்கிய சுகந்தன், அருள் டிப்சன், சாமுவேல், அந்தோணி உள்ளிட்ட 21 மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டுசென்றனர். மேலும், இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை, வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாமக, தமாகா கண்டனம்: தமிழக மீனவர்கள் கைதுக்கு பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்புமணி: கடந்த 2 மாதங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இது தொடர்பாக இலங்கை அரசை மத்திய அரசுஎச்சரிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடருமானால், மத்திய அரசுதூதரக அளவிலான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண் டும்.
ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.