மதுராந்தகம்/சென்னை: மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பேருந்து கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேற்று தனியார் பேருந்து ஓரத்தி பகுதியில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும், சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதாக கூறப்படுகிறது.
இதில், பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணித்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கீழே சாலையில் விழுந்தனர். இதில், மோகல்வாடி கிராமத்தை சேர்ந்த கமலேஷ் (21),தனுஷ் (19), மோனிஷ்(20) ஆகியமூன்று பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
மேலும் காயம்அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ரவிச்சந்திரன் என்ற ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘இவ்விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பேரிழப்பு அனைவருக்கும்ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2லட்சம் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.