உதகை: உதகை குதிரைப் பந்தயத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பந்தயக் குதிரைகள் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும்சுற்றுலப் பயணிகளை கவர்வதற்காக, கோடை சீசனின்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பந்தயத்துக்காக பெங்களூரு, சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் வரவழைக்கப்படும்.
நடப்பாண்டு குதிரைப் பந்தயத்துக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குதிரைகள் ஓடும் பாதையில் உள்ள புற்கள் உரமிட்டு, சமன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓடுதளத்தில் உள்ள புற்கள் சீராக வளர, தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருவதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரத்யேக வாகனங்களில் குதிரைகள் உதகைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஜாக்கிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.