சென்னை: மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த 70 வயது மாமியாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராஜம்மாள் ( 70 ) என்பவர் மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய அரசின் பெண் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணைப்படி ராஜம்மாளை முன் கூட்டியே விடுவிக்க வேண்டுமெனக்கோரி அவரது மகள் கீதா மலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கியஅமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜம்மாள் 2 ஆண்டுகள் 5 மாதம் 29 நாட்கள் மட்டுமே சிறைதண்டனையை அனுபவித்துள்ளதால் அவரை மத்திய அரசின் அரசாணைப்படி முன்கூட்டியே விடுவிக்க இயலாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சைபுல்லா, ராஜம்மாளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நாட்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை தனக்கான சிறை தண்டனையில் 50 சதவீதத்தை அனுபவித்து விட்டார். மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் மத்திய அரசின் இந்த அரசாணைப்படி அவரை முன் கூட்டியே விடுவிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், சிறையில் இரண்டரை ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த 70 வயது ராஜம்மாளை விடுவித்து உத்தரவிட்டுள்ளனர்.