தமிழகம்

மாநிலங்களவை சீட் மறுப்பா? - பிரேமலதா விளக்கம்

செய்திப்பிரிவு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தேர்தல் வந்தால் கூட்டணி வைப்பது இயற்கை. முன்னாள் அமைச்சர்கள் வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தனர். எனவே, தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மரியாதை நிமித்தமாக அதிமுக தலைமையகத்துக்கு சென்று பேசி வந்துள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்னும் எங்களின் உரிமையை கேட்டிருக்கிறோம். பொறுத்திருங்கள் நல்ல செய்தி வரும் என கூறியுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தி.

பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் எங்களுடன் நட்புறவுடன் இருக்கின்றனர். கட்சிக்கு எதிர்காலத்துக்கு ஏற்ற நல்ல முடிவை எடுப்போம். ஒரு வார காலத்துக்குள்ளாக அடுத்தகட்ட நகர்வு குறித்து விளக்குவோம்.

ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தப்படும் செய்தியை பார்க்கும்போது நாம் தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது ஆப்ரிக்க நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. தமிழக வரலாற்றில் இந்தளவு சட்ட ஒழுங்கு சீர்கெட்டது இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்னும் மக்களின் எண்ணத்தை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. போதை இல்லா தமிழகத்தை உருவாக்கி மக்களுக்கு பாதுகாப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT