சென்னை: சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில் இன்றும் (9-ம் தேதி), நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடோஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலைவழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில்திருப்பி விடப்படும். இந்தமாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
இதேபோல், அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்ஜிஆர்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடது புறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை,உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.
மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்துக்குத் தகுந்தபடி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். வாகனங்களில் செல்வோர் இதற்கு ஏற்ப பயணிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.