நாகர்கோவில்: ஆன்மிகத்தால்தான் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பங்கேற்ற தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கோயில் வளாகத்தில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற 87- வது இந்து சமய மாநாட்டை தொடங்கிவைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியர்களின் 500 ஆண்டுகாலகனவு அயோத்தி ராமர் கோயில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மிகம் தழைக்கும் நாடு, நன்றாக இருக்கும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்குக் காரணம் நம் நாட்டில் மேலோங்கியுள்ள ஆன்மிகம்தான். ஆன்மிகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். என் மதம்பற்றி பேசினால், மதவாதி என்கிறார்கள். மதவாதி என்கிறவர்களை நான் எதிர்க்கிறேன்.
இந்தியாவின் பண்பாடு, கலச்சாரம் நல்ல வாழ்வியலைத் தருகிறது. இதை இந்து மதம் கற்றுக்கொடுக்கிறது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.