திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் இந்த பரிதாபம் நேரிட்டது.
திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே குருந்துடையார்புரம் தனசெல்வம் மகன் பால்ராஜ் ( 13 ). பாளையங்கோட்டை முருகுன்குறிச்சியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் முருகன் குறிச்சி நிறுத்தத்திலிருந்து அரசு பேருந்தில் பால்ராஜ் ஏறினார்.
கூட்ட நெரிசலால் சக மாணவர்களுடன் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்துள்ளார். அப்போது திடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.