தமிழகம்

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் வழக்கு: காவல் துறை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனிமனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல் துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டிருகிறது. பணிப்பெண்ணை தங்களது வீட்டுப் பெண்ணைப் போல மனுதாரர்கள் நடத்தியுள்ளனர். பணிப்பெண்ணின் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தை மனுதாரர்கள் செலுத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்’ எனக் கூறி அதுதொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

மேலும், கடந்த மாதம் 15-ம் தேதி அன்று அந்த பெண்ணை, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவர் கரண்டி உள்ளிட்டைவைகளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், ‘பணிப் பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் விரும்பிய படிப்பைக்கூட படிக்க விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை. புகாருக்கு உள்ளான இருவரிடமும் காவல்துறை விசாரணை கூட நடத்தவில்லை.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு காவல் துறை தரப்பு பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர் பிரதாப், இது குறித்து பதில்மனு தாக்கல் செய்வதாக கூறினார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘இதுபோன்ற தனிமனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது?’ என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஜாமீன் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

SCROLL FOR NEXT