சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் 28-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.