தமிழகம்

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட 11 பேரை விடுதலை செய்து சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவந்த கொளத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீஸார், செல்வம், முரளி, சையது இப்ராகிம், குமார் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனின் தூண்டுதல் காரணமாகவே தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் போலீஸார் வேண்டு மென்றே ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புவனேஸ்வரனின் தந்தை சிவா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்து செய்து,இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த 2014-ல் உத்தரவிட்டது. அதன்படி இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐஅதிகாரிகள், திமுக முன்னாள்எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி,குமார், தணிகாச்சலம், பாலச்சந்திரன் உட்பட 12 பேருக்கு எதிராகசிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கைவிசாரித்த சென்னை எம்.பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றநீதிபதி ரவி, குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதில், பாலச்சந்திரன் வழக்குவிசாரணையின்போது இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT