தமிழகம்

திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்ற ஹெச்.ராஜா உட்பட 12 பேர் கைது

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்துக்கு சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. இவர் இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், பாஜக நிர்வாகிகள் சிவபிரபாகரன், ஹரிகரன் உடன் சென்றனர்.

மலைக்கு சென்ற ஹெச்.ராஜா கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகத்தால் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டதா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். அதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என போலீஸாரை கேட்டுக்கொண்டார். அதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

இதனால் போலீஸாருடன் ஹெச்.ராஜாவும், பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்கு சென்றார். பின்னர் போலீஸார் அவரையும், உடன் சென்றவர்களை அடிவாரத்துத்துக்கு அழைத்து வந்தனர். தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்கு சென்றதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அனுமதித்தால் ஒரு நாளுடன் முடிந்திருக்கும். அதை செய்யாமல் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பிரச்சினையை பெரிதாக்கிவிட்டனர். இருவரும் சட்டவிரோத அதிகாரிகள். சட்டத்தை மதிக்காத தீய சக்திகள்.

தீய சக்திகளுக்கு அதிகாரிகளுக்கு துணை போக்கூடாது. கல்லத்தி மரம் தல விருட்சம். அதில் தர்கா நிர்வாகம் கொடியேற்றியுள்ளது. அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் கொடியேற்றியுள்ளனர்.

கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அந்தக் கொடி இப்போது வரை அகற்றப்படவில்லை. இதனால் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால் இந்துக்கள், முருக பக்தர்களும் திரண்டு வந்து கொடியை அகற்றும் நிலை ஏற்படும்.

இந்துக்களின் புனிதமான தீபத்தூனை, சட்டமே தெரியாத சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிணம் புதைக்கும் இடத்தில் தான் பிணத்தை புதைப்பார்கள் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி உடலை கண்ணம்மாபேட்டையில் தான் புதைத்திருக்க வேண்டும் எதற்கு கடற்கரையில் புதைத்தீர்கள். இந்து விரோத போக்கை நிறுத்த வேண்டும். தை மாத பூச கார்த்திகை நட்சத்திரத்திற்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் இதை தேர்தல் பிரச்சினையாக மாறி திமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

SCROLL FOR NEXT