தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்: உண்மை கண்டறியும் சோதனை வழக்கு தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான உண்மை கண்டறியும் சோதனை குறித்த வழக்கை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த 31 பேர் டிஎன்ஏசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 10 பேரை உண்மைகண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் சம்மன்அனுப்பினர். ஆனால், அனைவரும் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்தநீதிபதி ஜெயந்தி, 10 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விசாரணை அதிகாரி மாற்றம்: வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பால்பாண்டிக்கு பதிலாக கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டியிடம் கேட்டபோது, ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தேன். ஆகையால், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, தஞ்சாவூர் சிபிசிஐடி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT