சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்களில் விவிபேட் கருவிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, விவிபேட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பொது இடங்கள்,கல்வி நிறுவனங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி, அதில் வாக்களிக்கும் கருவி, விவிபேட் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்து, அதை சரிபார்ப்பது எப்படி என அறிந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாநகராட்சி அதிகாரிகள் தீர்த்து வைக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சி.சுரேஷிடம் கேட்டபோது, ``கடந்த 25-ம்தேதி முதல் சென்னையின் 16சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேட்பு மனு தாக்கல் நாள் வரைவிழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.