தமிழகம்

முத்தரப்பு ஒப்பந்த வரைவு மீது கருத்து கூற 15 நாட்கள் அவகாசம் கோரி மின்வாரியத்துக்கு சிஐடியு கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: முத்தரப்பு ஒப்பந்த வரைவு மீது கருத்து கூற 15 நாட்கள் அவகாசம் கோரி மின்வாரியத்துக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு மின்வாரியத்தை மூன்றாகப் பிரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, டிஎன்இபி ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும், அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், தற்போது அரசாணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மின்வாரியத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,முத்தரப்பு ஒப்பந்த வரைவு உருவாக்கப்பட்டு, தொழிற்சங்கங்களிடம் கடந்த 5-ம் தேதி மின்வாரியம் வழங்கியது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு தரப்பினர் கூறியதாவது: திருத்தப்பட்ட மின்சாரச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசுசார்பில் கடுமையான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் 2010-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட நிறுவனங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முத்தரப்பு ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான வரைவிலும் வாரியத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்துவது தொடர்பான சாதகமான அம்சங்கள் இடம்பெறவில்லை. இது தொடர்பாக ஆலோசித்து கருத்து கூற 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ளோம். இதற்கிடையே, வாரியத்தை மேலும் மூன்றாகப் பிரித்து மொத்தம் 5 நிறுவனங்களாகச் செயல்படும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரிக்கப்பட்ட நிறுவனங்கள் மீது கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால்கடன் சுமை அதிகமாகி திவாலானால் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சூழல் உருவாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT