உதகை: உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது, அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்தது. இதில், மண்ணில் புதைந்து 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தையொட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது. இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர். தொழிலாளர்கள் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனடியாக ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உதகை காந்திநகரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.