தமிழகம்

மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி: சோதனை முறையில் பயன்படுத்த ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது.

7 சேவைகள்: இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும்.

இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இந்த செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏபிகே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT