தமிழகம்

அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருத்தொண்டர் சபை அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம்1984-ல் பூம்புகார் கப்பல் கழகத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. தற்போது வரை ரூ.3 கோடிவாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வாடகை பாக்கியை வசூலிக்குமாறு 2022-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை வாடகை பாக்கி வசூலிக்கப்படவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது,நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் சுப்புராஜ் வாதிடும்போது, "பூம்புகார் கப்பல் கழகம் ரூ.80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அவகாசம் வழங்கினால், வாடகை பாக்கி வசூலிக்கப்படும்" என்றார்.

பின்னர் நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: ரூ.3 கோடிவாடகை பாக்கி வைக்கும் வரைஅறநிலையத் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா? அறநிலையத் துறை கட்டிடத்துக்கு சாதாரண ஏழை வியாபாரிகள் வாடகை வழங்க மறுத்தால், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் கழகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நீதிமன்றம் உத்தரவிட்டும் வாடகை பாக்கியை வசூலிக்கவில்லை. கோயில் சொத்துகளின் வருமானங்களை இப்படியே விட்டுவிடலாமா? தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்கள் வேலைகளை செய்கிறார்களா? இல்லையா?

அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அரசு நல்ல ஊதியம்தானே வழங்குகிறது. குறைவாக சம்பளம் வழங்கவில்லையே? அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT