‘ஜாக்டோ’, ‘ஜியோ’ ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்: கோவை, திருப்பூர், உதகையில் ஏராளமானோர் கைது

செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர் / உதகை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், உதகையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘ஜாக்டோ’, ‘ஜியோ’ ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சாலமன் ராஜ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை, முதுகலை, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. சாலை மறியலில் பங்கேற்ற நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெய சீலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் அண்ணாதுரை, சலீம், முருகேசன், ஜெயக்குமார், சுனில் குமார், முத்துக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 82 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT