தமிழகம்

கூகுள் மேப்பை நம்பி படிக்கட்டுகளில் இறங்கிய சுற்றுலா வாகனம்: 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

செய்திப்பிரிவு

கூடலூர்: கூடலூர் அருகே கூகுள் மேப் தவறாக பாதையை காட்டியதில், படிக்கட்டில் சிக்கிய சுற்றுலா வாகனத்தை பொதுமக்கள், போலீஸார் மீட்டனர்.

பெரும்பாலானோர் இன்று கூகுள் மேப்பை பயன்படுத்தி, தாங்கள் விரும்பி செல்லும் இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் கூகுள் தவறான வழியை காட்டிவிடுவதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள், உதகையை சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் சொகுசு காரில் மைசூரு புறப்பட்டனர். கூகுள் மேப் துணையுடன் அவர்களின் கார் கூடலூர் சென்ற போது, மைசூருக்கான வழியை தவறாக காட்டியுள்ளது.

அதை நம்பி சென்ற அவர்கள், படிக்கட்டுகள் இருப்பதை அறியாமல் காரை இயக்கியுள்ளனர். இதனால், படிக்கட்டுகளில் கார் சிக்கிக் கொண்டது. அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், காரை நிறுத்தி இறங்கி பார்த்தபோது, தாங்கள் வந்த வழி தவறானது என்று புரிந்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த கூடலூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள், ஹாலோபிளாக் கற்களை அடுக்கி வைத்து மெதுவாக காரை நகர்த்தினர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர், பிரதான சாலைக்கு காரை கொண்டு வந்தனர். நிம்மதி பெருமூச்சுவிட்ட சுற்றுலா பயணிகள், போலீஸார் மற்றும் பொது மக்களுக்கு நன்றி கூறிவிட்டு மைசூரு புறப்பட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT