தமிழகம்

10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி: கூட்டம் அலைமோதியதால் கடையை மூடிய போலீஸார் @ ஆத்தூர்

செய்திப்பிரிவு

சேலம்: ஆத்தூரில் 10 ரூபாய் நாணயத் துக்கு பிரியாணி வழங்குவதாக அறிவித்த விளம்பரத்தை பார்த்து ஏராளமான மக்கள் திரண்டதால், போலீஸார் கடையை இழுத்து மூடிய சம்பவம் நடந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணி ( 34 ). இவர் அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் பிரியாணி கடை திறந்துள்ளார். திறப்பு விழா சிறப்பு விற்பனையாக 10 ரூபாய் நாணயம் வழங்கினால், பிரியாணி வழங்குவதாக துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்தார். நேற்று காலை கடை திறந்த நிலையில் 10 ரூபாய் நாணயத்துடன் கடை முன்பு கூட்டம் அலைமோதியது. பலரும் போட்டி போட்டுக் கொண்டு 10 ரூபாய் நாணயம் கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றனர். 10 ரூபாய் நாணயத்துடன் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் டவுன் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடையை இழுத்து மூட உரிமையாளருக்கு அறிவுறுத்தினர். கடை திறந்த சில மணி நேரத்தில் மக்களின் கூட்டத்தால், கடையை உரிமையாளர் இழுத்து மூடினார். பிரியாணி தீர்ந்து விட்டதாக தகவல் பலகையில் அறிவிப்பு வைக்கப்பட்ட நிலையில், பலரும் 10 ரூபாய் நாணயத்துடன் வந்து பிரியாணி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT