பழநி: தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் பலன் இல்லை, என முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், பழநியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட அவைத் தலைவர் குப்புசாமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணு கோபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விஸ்வநாதன் பேசியதாவது: மக்கள் விரோதமாக யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு எதிராக அதிமுக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்கிறது. அந்த வகையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால், நாங்கள் பாஜகவை எதிர்க்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சிறுபான்மை மக்கள் அதிமுகவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.
தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் பலன் இல்லை. நாங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கப் போவதில்லை. மக்கள் பிரச்சினையை சுட்டிக் காட்டி, அதற்கு தீர்வு கேட்டுத்தான் சந்திப்போம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் திமுகவினர் தங்களது சொத்துகளை பாதுகாக்க போராடுவார்கள். ஆனால், தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுகிற இயக்கம்தான் அதிமுக. தற்போதைய நிலையில் திமுக மீண்டும் வரவே கூடாது என மக்கள் முடிவு எடுத்துவிட்டனர் என்றார்.
பின்னர், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசுகையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது, திமுக உள்ளிட்ட அனைத்துகுப்பையையும் நீக்கி தமிழகத்தை சுத்தப்படுத்துவோம். சேலத்தில் நடந்த திமுக மாநாட்டை கின்னஸோடு ஒப்பிடுகின்றனர். அது கின்னஸ் மாநாடு அல்ல சர்க்கஸ் மாநாடு. அதில் தங்களது குடும்பத்தினரை மாறி மாறி வாழ்த்தியதுதான் மிச்சம் என்றார்.